தபால் திணைக்களத்துக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தை பத்து வீதமாக அதிகரிக்க வேண்டுமென அமைச்சர் பந்துலகுணவர்தன தெரிவித்தார்.கிழக்கு மாகாண தபால் நிர்வாகக் கட்டடத் தொகுதி 45 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் தெடர்ந்தும் உரையாற்றுகையில்,
தபால் திணைக்களத்துக்கு கிடைக்கும் வருமானத்தில் 54 வீதமான வருமானம் மேல் மாகாணத்திலிருந்தே கிடைக்கிறது. கிழக்கு மாகாணத்திலிருந்து கிடைப்பது ஏழு அல்லது ஆறு வீதமாகவே உள்ளது. இது 10 வீத இலக்காக அதிகரிக்கப்பட வேண்டும். இதற்காகவே படித்து பட்டம் பெற்ற ஒருவரை கிழக்கு மாகாண தபால் மாஅதிபராக நியமித்துள்ளோம். அஸ்லம் அவர்கள் இதனை பத்து சதவீதமாக மாற்றியமைக்க வேண்டும் அதற்காகவே இதனை அவரிடம் கையளித்திருக்கிறோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அன்றைய நாட்களில் பிரதமராக இருந்தபோது, இக்கட்டடம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த நடவடிக்கைகள் மந்தகதியிலேயே நடைபெற்றன.
நான், இந்த அமைச்சைப் பொறுப்பேற்ற பின்னர், அமைச்சுக்களுக்கு நிதி ஒதுக்கப்படாத ஒரு காலமிருந்தது.இருந்தும் இதற்காக ஒரு விசேஷ அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து கிடைத்த நிதியின் மூலமே இக் கட்டடம் திறந்து வைக்கப்படுகிறது.
இந்த கட்டிடத்தை தனிப்பட்ட நபர்களுக்கு கொந்தராத்து கொடுக்காது, என்னுடைய அமைச்சின் பொறியியல் நிர்வாக பகுதியினருக்கே ஒப்படைத்தேன். தபால் திணைக்களத்தின் ஒரு சில நடவடிக்கைகள், தனி அமைப்புக்களால் இயக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் பணத்தை அச்சடித்துக் கொண்டும் கடன் பெற்றுக்கொண்டும் எவருக்கும் சம்பளத்தை வழங்க முடியாது. அருகிலே இருக்கின்ற கல்லடி பாலத்தை கட்டி முடிப்பதற்கு 2.6 பில்லியன் டொலர் தேவைப்பட்டது. கிண்ணியா பாலத்துக்கு அதைவிட கூடுதலான தொகை தேவைப்பட்டது. இன்று கல்லடி பாலத்தை கட்டுவதாயின் 2.6 பில்லியனுக்கு பதிலாக 6.2 பில்லியன்கள் தேவைப்படும்.
(மட்டக்களப்பு குறூப் நிருபர்)