இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் அப்பிள்டன் (Micheal Appleton) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று (04) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர் ஸ்தானிகரான அப்பிள்டன் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ளார்.இவ்வாறான நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றதோடு,இரு தரப்பினருக்கும் இடையில் இலங்கையின் தற்போதைய சமூக,பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலும் இடம்பெற்றது.
தற்போதைய அரசாங்கம் மக்களை ஒடுக்கி அதிக வரி விதிக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் விளக்கமளிக்கப்பட்டதோடு,வரி விதிக்காமல் அரச வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நியூசிலாந்து உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார்.
அரசாங்கம் வேண்டுமென்றே மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தல் தொடர்ந்தும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றமை குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது
விளக்கமளித்தார்.
அவ்வாறே,நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் கடந்த காலங்களில் இலங்கையில் ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவிக்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இங்கு நடவடிக்கை எடுத்தார்.
இந்நிகழ்வில் நியூசிலாந்தின் பிரதி உயர் ஸ்தானிகர் அன்ட்ரூ டிராவலர்(Andrew Traveller) அவர்களும்,ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான நிரோஷன் பெரேரா மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.