லேக் ஹவுஸ் நிறுவனத்தை ஊடக நிறுவனங்கள் மத்தியில் சமப்படுத்த முடியாத நிறுவனமாக முன்னேற்றுவதற்கு, இவ் வருடத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம் தெரிவித்தார்.
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சகல பத்திரிகைகளையும் நவீன உலகிற்கு ஏற்ப டிஜிட்டல் மயப்படுத்தி மக்களுக்கு வழங்கும் வகையில் 2024 ஆம் ஆண்டு, பத்திரிகையின் தாய் வீட்டிற்கு வசந்தம் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டில் சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் தற்போது நிறுத்தப்பட்டுள்ள சில வாராந்த பத்திரிகைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் சமய அனுஷ்டானங்களையடுத்து உரையாற்றும்போதே, நிறுவனத்தின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது நிறுவனத்தின் காலாண்டு பத்திரிகையான ‘லேக் ஹவுஸ் செய்தி’ உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டு வைக்கப்பட்டது.இது, நிறுவனத்தின் தலைவரினால் தினமின பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மனோஜ் அபேதீரவுக்கு கையளிக்கப்பட்டது.
நிறுவனத்தில் ஆறு வருடங்களுக்கு மேல் ஒப்பந்த அடிப்படையில் கடமைபுரிந்த 18 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனமும் வழங் கப்பட்டது.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம்,
2023 ஆம் ஆண்டு எமக்கு சவால்கள் நிறைந்த வருடமாக அமைந்தது. உலகளாவிய ரீதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய கொவிட் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார, அரசியல் நெருக்கடிகளால் கடந்த வருடங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது. எனினும், கடந்த வருடத்தில் நிதி ரீதியில் லாபமீட்டும் வருடமாக அமைந்திருந்தமையை குறிப்பிட வேண்டும். இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கும் முகாமைத்துவ அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)