கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் பாடசாலைகளில் கலை மன்றங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் கடந்த செவ்வாய்க்கிழமை (19) நிகழ்வொன்று நடைபெற்றது.
பாடசாலை மாணவர்களின் கலை இலக்கிய ஆற்றல் மற்றும் ஆளுமையை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள 17 பாடசாலைகளில் கலை மன்றங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கமைய, அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் கருங்கொடி கலாமன்றம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன், அதற்கான நிர்வாகத் தெரிவும் நடைபெற்றது.
இதன்போது கலையுடன் தொடர்புடைய நூல்கள் மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தரால் பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
முஸ்லிம் மத்திய கல்லூரி அதிபர் ஏ.எச்.பெளஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், அக்கரைப்பற்று கல்வி வலய தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ.சவுறுதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்