Sunday, May 12, 2024
Home » வெள்ளம்: முல்லைத்தீவில் 1,126 குடும்பங்களைச் சேர்ந்த 3,463 பேர் பாதிப்பு

வெள்ளம்: முல்லைத்தீவில் 1,126 குடும்பங்களைச் சேர்ந்த 3,463 பேர் பாதிப்பு

- முழுமையான மீட்புப் பணியில் இலங்கை இராணுவத்தினர் 

by Rizwan Segu Mohideen
December 18, 2023 10:02 am 0 comment

– 68 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற அடை மழை வெள்ளம்,  காரணமாக 1,126 குடும்பங்களைச் சேர்ந்த 3,463 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், 68 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

முத்துஐயன்கட்டுக்குளம் 4 வான் கதவுகளும் 2’ 9” (2 அடி 9 அங்குலம்) அளவில் திறக்கபட்டுள்ளதுடன் 2’ (2 அடி) வான் பாய்கிறது.

முத்துயன்கட்டு, பேராறு, முத்துவினாயகபுரம்,பண்டாரவன்னி வசந்தபுரம் மன்னகண்டல் ஆகிய கிராம மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நீரில் மூழ்கியோரை பாதுகாப்பாக மீட்பதில் இராணுவத்தினர் முன்னின்று செயற்படுவதோடு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அதிகாரிகள், கிராம அலுவலர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர்களும் உதவி வருகின்றனர்.

இவ்வாறு மீட்கப்பட்டோர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளைபுதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் மன்னாகண்டல் பகுதியில் வெள்ளநீர் வீதியை குறுக்கறுத்து பாய்வதால் வீதி போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

மதவளசிங்கன்குளம் இரண்டு அடி வான் பாய்கிறது இதன்ல் பூதன்வயல், கணுக்கேணி கிழக்கு,முறிப்ப பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதேபோன்று தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் பகுதியில் உள்ள மக்களும் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளனர் இதனைவிடவும் வட்டுவாகல் பாலத்தில் சேதம் ஏற்ப்பட்டுள்ளமையினால் மக்கள் அவதானமாக பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வவுனிக்குளம் வான் பாய்வதால் மாந்தை கிழக்கு பிரதேஞத்துக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட பாலியாறு பெருக்கெடுத்து பாய்வதால் சிறாட்டிகுளம் மக்கள் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் ஆலங்குளம் கொக்காவில் வீதியில் மருதங்குளம் ஐயன்கன்குளம் வான் பாய்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புளியமுனை விவசாய நிலங்களுக்கு மக்கள் செல்ல முடியாது வீதிகள் வெளளள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் படகு சேவை மூலம் மக்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வருகின்றனர்.

மழை தொடர்ந்து பெய்துவருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளனர்.

இதேபோன்று குளங்களுக்கான நீர் வரத்து மிக வேகமாக காணப்படுகின்ற நிலைமையில் பல்வேறு குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளதோடு வான் பாய்கின்ற நீர் மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் மக்கள் மிக அவதானமாக செயல்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று (17) மாலை 4 மணி வரையான தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலே அம்பாள்புரம், கரும்புள்ளியான், ஒட்டறுத்தகுளம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், சிராட்டிகுளம், சிவபுரம், மூன்றுமுறிப்பு,பூவரசங்குளம்,விநாயகபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 284 குடும்பங்களை சேர்ந்த 946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி, இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், தச்சடம்பன், கூழாமுறிப்பு, கனகரத்தினபுரம், காதலியர்சமனங்குளம், தண்டுவான்,ஒட்டுசுட்டான்,பழம்பாசி, பேராறு, மணவாளன்பட்டமுறிப்பு, கணேசபுரம்,கரஉவஏலன்கண்டல் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 216 குடும்பங்களை சேர்ந்த 696 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கள்ளப்பாடு, சிலாவத்தை, செல்வபுரம், வற்றாப்பளை, தண்ணிமுறிப்பு, முள்ளியவளை தெற்கு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு, கொக்கிளாய் வடக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 93 குடும்பங்களை சேர்ந்த 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அணிஞ்சியன்குளம்,உயிலங்குளம், தென்னியங்குளம், கோட்டைகட்டிய குளம், ஆலங்குளம், தேராங்கண்டல், கல்விளான், மல்லாவி,யோகபுரம் கிழக்கு, புகழேந்திநகர், பாரதிநகர், யோகபுரம் மேற்கு,அம்பலப்பெருமாள்குளம், அமைதிபுரம், புத்துவெட்டுவான், பழையமுறிகண்டி, ஐயன்கன்குளம்,துணுக்காய், யோகபுரம் மத்தி, திருநகர் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 237 குடும்பங்களை சேர்ந்த 732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்கள் பிரிவில் புதுக்குடியிருப்பு மேற்கு, தேவிபுரம்,மாணிக்கபுரம்,உடையார்கட்டு வடக்கு,உடையார்கட்டு தெற்கு மற்றும் வள்ளிபுனம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 296 குடும்பங்களை சேர்ந்த 767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையிலே மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1126 குடும்பங்களை சேர்ந்த 3463 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 5 குடும்பங்களை சேர்ந்த 21 பேரும் பண்டாரவன்னி கிராம அலுவலர் பிரிவில் 63 குடும்பங்களை சேர்ந்த 201 பேருமாக 68 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதேச செயலாளர் உதவி பிரதேச செயலாளர் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஊழியர்கள் கிராம அலுவலர்கள்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் மக்களுக்கான சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றனர்.

மாங்குளம் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT