யெமனில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் லைபீரிய கொடியுடனான சரக்குக் கப்பல் ஒன்று தீப்பற்றி இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தனியார் உளவு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேலை நோக்கிச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாக யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்திருக்கும் நிலையிலேயே நேற்று (15) இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஹபங் லொயிட் ஏ.ஜி. நிறுவனத்திற்கு சொந்தமான இந்தக் கப்பல் பாப் அல் பன்தாப் நீரிணை ஊடாகச் செல்லும் போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதனால் கப்பலில் தீ ஏற்பட்டிருப்பதோடு ஒரு கொள்கலன் கடலில் விழுந்துள்ளது. ஈரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த நவம்பரில் இஸ்ரேலுடன் தொடர்புபட்ட கப்பல் ஒன்றை கடத்தியதோடு அந்தக் கப்பல் தொடர்ந்து ஹொதைதா துறைமுகத்தில் ஹூத்திக்களின் பிடியில் உள்ளது. அதபோன்று பலஸ்தீனத்திற்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி அண்மைய நாட்களில் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.