இந்தியா – தென் ஆபிரிக்கா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3ஆவது T20 ஆட்டம் இன்று (14) இரவு 8.30 மணிக்கு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே T20 தொடரை சமன் செய்யமுடியும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது இந்திய அணி. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரில் டர்பனில் நடைபெறவிருந்த முதல் ஆட்டம் மழை காரணமாக இரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம் (12) கெபர்ஹாவில் நடைபெற்ற 2ஆவது ஆட்டத்தில் தென் ஆபிரிக்க அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடைசி மற்றும் 3ஆவதுஆட்டம் இன்று இரவு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது.
தென் ஆபிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கக்கூடும். 2ஆவது ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட மார்கோ யான்சன், ஜெரால்டு கோட்ஸி ஆகியோருக்கு இன்றைய ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் முதல்தர கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளனர்.