களுவாஞ்சிக்குடி சிலோன் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் (Ceylon College of Nursing Pvt Ltd ) தாதிய உதவியாளர் கற்கை நெறியினை வெற்றிகரமாக பூர்த்திசெய்த மாணவ, மாணவிகளுக்கான தொப்பி அணிவித்து பட்டமளிக்கும் நிகழ்ச்சி மட்டக்களப்பு கல்லடி கிறீன்கார்டின் விடுதியில் நடைபெற்றது.
கல்லூரியின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜே.முரியா டிலாணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதார அமைச்சின் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் எஸ்.சிறீதரன் அவர்களும், கௌரவ அதிதிகளாக முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன், கிழக்கு மாகாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே.மோகனகுமார், ஓய்வுபெற்ற பிராந்திய சுகாதார பணிப்பாளர் டொக்டர் திருமதி நவரெட்ணராஜா, கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஆர்.முரளீஸ்வரன், மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் பரிசோதகர் உஜித் என்.பி லியனகே ஆகியோரும் கலந்து கொண்டனர். இதன்போது சிலோன் தாதியர் கல்லூரியின் தாதிய மாணவ மாணவிகள் 100 பேருக்கு தொப்பி அணிவிக்கப்பட்டு பட்டமளிக்கப்பட்டது.
எம்.ஐ.எம்.அஸ்ஹர் (மாளிகைக்காடு குறூப் நிருபர்)