ஐக்கிய அரபு இராச்சியத்தில் நேற்று ஆரம்பமான 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் நாள் போட்டியில் நேபாள அணியை பாகிஸ்தான் அணி இலகுவாக வென்றது.
டுபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட நேபாள அணி 47.2 ஓவர்களில் 152 ஓட்டங்களுக்கு சுருண்டது. மூவர் மாத்திரமே இரட்டை இலக்கங்களை பெற்றதோடு மத்திய வரிசையில் உத்தார் மகர் அதிகபட்சமாக 51 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் மொஹமது சீஹான் 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
பதிலெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 26.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 153 ஓட்டங்களை எட்டியது. எட்டு அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கிண்ணத் தொடரில் ஏ குழுவுக்காகவே இந்தப் போட்டி நடைபெற்றது. அந்தக் குழுவில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை பி குழுவில் இடம்பெற்றிருக்கும் இலங்கை இளையோர் அணி இன்று தனது முதல் போட்டியில் களமிறங்கவுள்ளது. டுபாயில் இலங்கை நேரப்படி இன்று 11 மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் போட்டியில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி ஜப்பானை எதிர்கொள்ளவுள்ளது.