இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய இலங்கை கிரிக்கெட்டின் முழு நேர கிரிக்கெட் ஆலோசகர் பதவி ஒன்றுக்கு நியமிக்கப்படவுள்ளார். இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.
அண்மையில் நியமிக்கப்பட்ட விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் வழிகாட்டலில் இந்த நியமனம் இடம்பெறுவதாக தெரியவருகிறது.
இந்த நியமனம் தொடர்பில் சனத் ஜயசூரிய, இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா மற்றும் சர்வதேச கிரிக்கெட் உப தலைவர் ஜயந்த தர்மதாச ஆகியோருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.
உயர் செயல்திறன் நிலையத்துடன் தொடர்புபட்ட ஆலோசகர் பதவி ஒன்றுக்காகவே சனத் ஜயசூரிய நியமிக்கப்படவுள்ளார். இந்த நிலையத்தை முறைப்படி முகாமைத்துவம் செய்தல் அவரின் அடிப்படை பொறுப்பாக உள்ளது. அதேபோன்று 19 வயதுக்கு உட்பட்ட அணிகள், இலங்கை ஏ அணிகள் மற்றும் மற்ற தேசிய மட்டத்திலான அணிகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதும் அவரின் பொறுப்பின் கீழ் வரவுள்ளது.
இது தவிர தேசிய அணியின் தேவைக்கு அமைய பின்பற்ற வேண்டிய தொலைநோக்கு செயற்பாடுகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் வீரர்களின் உடற்பயிற்சி மற்றும் பயிற்சி செயற்பாடுகள் தொடர்பில் கண்டறிவதும் சனத் ஜயசூரியவின் பொறுப்பின் கீழ் வரவுள்ளது.
ஒட்டுமொத்தமாக இலங்கை அணியின் முழுமையான அபிவிருத்தி தொடர்பில் பொறுப்பு மற்றும் பொறுப்புக் கூறல் சனத் ஜயசூரியவுக்கு வழங்கப்படவுள்ளது.
எனினும் இந்த நியமனம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் தனது பணிக்காக மாதாந்தம் 50 இலட்சம் ரூபா சம்பளம் கோரிய சனத் ஜயசூரியவின் கோரிக்கைக்கு இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழு ஒப்புதல் வழங்கி இருப்பதாக தெரியவருகிறது.
இலங்கை கிரிக்கெட்டின் அடுத்த நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நடக்கும் திகதி தீர்மானிக்கப்படாதபோதும் நிறைவேற்றுக் குழு கூட்டத்திற்கு முன்னர் அல்லது குழு அங்கத்தவர்களின் எழுத்துமூல ஒப்புதலுடன் சனத் ஜயசூரியவை மேற்கூறிய பதவிக்கு நியமிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்து வருகிறது.
1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியில் இடம்பிடித்திருந்த அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சனத் ஜயசூரிய இலங்கை அணியின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி பிரதி அமைச்சராக செயற்பட்ட அவர் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
அண்மையில் இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி மோசமான தோல்வியை சந்தித்ததை அடுத்து இலங்கை கிரிக்கெட்டில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இலங்கை கிரிக்கெட்டின் தேர்வுக் குழு தலைவராக பிரமோத்ய விக்ரமசிங்கவுக்கு பதில் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். தேர்வுக் குழுவில் மேலும் இளம் முன்னாள் வீரர்களை இணைப்பது தொடர்பிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தவிர, இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரர் பர்வீஸ் மஹ்ரூபுக்கும் விரைவில் உயர் பதவி ஒன்று வழங்கப்படவிருப்பதாக தெரிய வருகிறது.