சீனன்கோட்டை கல்வி அபிவிருத்திச்சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் அல் ஹுமைஸரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களான இளம் தொழிலதிபர் அப்ராஸ் அப்துல்லாஹ் மற்றும் நைபீல் நிஸாம் ஆகியோரின் நிதியுதவியுடன் (பாடசாலைக்கு அருகாமையில்) ஜாபிர் எவனியு பிரதேச பகுதியில் அமைக்கப்பட்ட மூன்று மாடிகளைக்கொண்ட புதிய கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஸீ. இப்றாஹீம் தலைமையில் சனிக்கிழமை (02) வைபவரீதியாக இடம்பெற்றது.
சீனன்கோட்டை பள்ளிச்சங்கத் தலைவர் ஏ.எச்.எம். முக்தார் ஹாஜியார், ஜாமிஆ நளீமிய்யா கலாபீட முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் (நளீமி) ஆகியோர் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளம் தொழிலதிபர்களின் பெற்றோர்களான எம்.ரி.ஏ. அப்துல்லாஹ், எம்.இஸட்.எம். நிஸாம் ஆகியோர் வைபவரீதியாக இதனைத் திறந்து வைத்தனர்.
பாடசாலையின் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான செலவீனங்களுக்கு வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்நிகழ்வில், சீனன்கோட்டை பள்ளிச்சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள், உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில், நளீமிய்யா முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.சி.அகார் முஹம்மத் (நளீமி) பாடசாலை அதிபர் எம்.சி. இப்றாஹிம், பள்ளிச் சங்க இணைப் பொருளாளர் ஏ.இஸட்.எம். ஸவாஹிர் ஆகியோர் பழைய மாணவர்கள் இருவரினதும் மகத்தான பணியை பாராட்டியதோடு தாம் கல்வி கற்ற பாடசாலையின் கல்வி முன்னேற்றத்திற்காக மேற்கொண்ட முன்மாதிரியான பணி ஏனைய பழைய மாணவர்களுக்கும் எடுத்துக்காட்டாகும் எனவும் தெரிவித்தனர்.
அஜ்வாத் பாஸி