தென்னாபிரிக்காவில் பிளாட்டினம் சுரங்கம் ஒன்றில் சுரங்கப் பணியாளர்களை மேலே அழைத்து வரும் மின் தூக்கி ஒன்று அறுந்து 656 அடி கீழே விழுந்ததில் பதினொரு பணியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 75 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜெஹன்னஸ்பேர்க்கின் வடமேற்கு ரஸ்டன்பேர்க்கில் உள்ள சுரங்கத்தில் கடந்த திங்கட்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சுரங்கப் பணியாளர்கள் தமது வேலை நேரம் முடிவடைந்து வெளியேறும்போதே விபத்து நேர்ந்துள்ளது. இதில் காயமடைந்த 75 பேரும் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அந்த சுரங்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பிளாட்டினம் உற்பத்தி நாடாக தென்னாபிரிக்கா உள்ளது. 2022இல் அங்கு சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துகளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் 2000 ஆம் ஆண்டில் இவ்வாறான விபத்துகளில் சுமார் 300 பேர் உயிரிழந்த நிலையில் கடந்த இரண்டு தசாப்தங்களில் இந்த எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.