மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் ‘BLUE SAPPHIRE’ விழாவின் தொடக்கமும், ஊடகவியலாளர் மாநாடும், இலட்சினை அறிமுகமும் கல்லூரி அதிபர் எம்.எம்.எம்.ஹிர்பகான் தலைமையில் மருதூர்க்கனி அரங்கில் அண்மையில் (19) இடம்பெற்றது
1959 ஆம் ஆண்டு சொற்ப வளங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட சம்ஸ் மத்திய கல்லூரி தற்போது சகல வசதிகளும் கொண்ட 3000 மாணவர்கள் கல்வி கற்கக் கூடிய இடமாக மாறியுள்ளமை கல்லூரியின் வளர்ச்சிப் பாதையின் முக்கிய அம்சமாகும். சூறாவளி, சுனாமி என இயற்கை அனர்த்தங்களால் சோதனைக்குள்ளான பாடசாலை சாதனைகள் பலவற்றையும் தாங்கி மருதமுனையின் கல்வி வரலாற்றில் 65 ஆண்டுகளைக் கடந்திருப்பதானது மிகப் பெரும் சாதனையாகும்.
ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரியும், முன்னாள் அதிபருமான ஏ.எல்.ஏ.சக்காப், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சபை செயலாளர் பி.எம்.அறபாத், பழைய மாணவர் சங்க செயலாளர் சுகைல் ஜமால்தீன், பாடசாலை பிரதி அதிபர் எம்.பி. ராஜி ஆகியோர் கலந்து கொண்டு பாடசாலையின் கடந்த வந்த பாதை, அதன் சாதனைப் பக்கங்கள், அதற்காய் உழைத்தவர்களின் தியாகங்கள் முதலியவற்றை ஊடகங்களுக்கு ஆதாரப்படுத்தினர்.
பாடசாலையின் வரலாற்றை திரும்பிப்பார்க்கும் வகையில் “BLUE SAPPHIRE” விழாவை ஒழுங்கமைத்துள்ளதாகவும் பழைய மாணவர்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகள், கவியரங்கம், கண்காட்சிகள், சம்ஸியன் வோக் போன்ற பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் இந்நிகழ்வுகளினூடாக பல்வேறு இடங்களிலும் உள்ள பாடசாலை பழைய மாணவர்களை ஒன்றிணைக்க எண்ணியுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
பெரியநீலாவணை தினகரன் நிருபர்