கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட அம்பகஹவெவ கிராம அலுவலகர் பிரதேசத்தில் கோன்வெவ கமநல சேவை மத்திய நிலையத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் தம்பலகொல்ல குளம் ‘சுஹுறு’ செயற்திட்டத்தின் மூலம் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் தற்போது அதன் அபிவிருத்தி பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதனால் இம்முறை பெரும்போக நெற் செய்கையினை மேற்கொள்ள முடியாமல் 150 க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தம்பகொல்ல குளத்தின் கீழ் 270 ஏக்கர் காணிகளில் சிறுபோகம் மற்றும் பெரும்போக செய்கையினை மேற்கொள்ள முடியும். இதனால் 150 க்கு மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவார்கள் என கிராம மக்கள் தெரிவிப்பதுடன் குளத்தின் அபிவிருத்தி பணி இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதனால் நாட்டு மக்களின் பணம் வீண் விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
குளக்கட்டுக்கு கிரவல் மண் இடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் குளத்தில் தோண்டப்பட்ட மண்ணை கட்டில் இட்டு இயந்திரம் ஒன்றினால் செப்பனிடப்படாமையினால் சேறுபடிந்து மக்கள் பயணிப்பதிலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்