பொத்துவில் உப பஸ் டிப்போ நேற்று (19) பிரதான டிப்போவாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவால் தரம் உயர்த்தப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப்பின் முயற்சியால்,இந்த டிப்போ தரமுயர்த்தப்பட்டது.
புதிய பொருளாதார மூலோபாயங்களை வலுப்படுத்தும் நோக்கில், பொத்துவில் மற்றும் அறுகம்பே சுற்றுலா வலயத்தை ஒருங்கிணைத்து போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொத்துவில் உப பஸ் டிப்போ நேற்று பிரதான டிப்போவாக தரம் உயர்த்தப்பட்டது.
இதன் போது பொத்துவில் பஸ் டிப்போவுக்கு போக்குவரத்து அமைச்சரினால் நவீன சொகுசு பஸ் வண்டியொன்றும் வழங்கி வைக்கப்பட்டதுடன் 60 மில்லியன் ரூபாய் செலவில் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லும் நட்டி வைக்கப்பட்டது.
நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,
பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டபிள்யூ. டி.வீரசிங்க, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பொறியியலாளர் லலித் டி அல்விஸ், போக்குவரத்து சபையின் உயரதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கொண்டனர்.
பஸ் டிப்போவின் துரித அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான முதற்கட்ட நிதியாக சுமார் 60 மில்லியன் ரூபாவை பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் எம் முஷாரப்பின் வேண்டுகோளுக்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வின் பணிப்புரைக்கமைய ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்பக் கட்ட வேலைகள் ஆரம்பிக்கப் பட்டிருந்தது.
(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)