ரயில்வே திணைக்களத்தை அதிகார சபையாக தரம் உயர்த்தினால் சிறந்த ரயில் சேவையை பெற்றுக் கொடுக்க முடியுமென, போக்குவரத்து, ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றி, தனி கேந்திரமான நிர்வாகத்திற்குப் பதிலாக நிர்வாக பகிர்வை
ஏற்படுத்தும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈ, டிக்கெட் முறைமை, ஜிபிஎஸ் முறைமை ஆகியவற்றை ஆரம்பித்து டிஜிட்டல் மயப்படுத்தினால் ரயில் சேவையை சிறந்த சேவையாக முன்னெடுக்க முடியும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், நிரோஷன் பெரேரா எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ரயில்வே திணைக்களத்தை அதிகாரியாக மாற்றுவதற்காக விசேட நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்து, அதன் அறிக்கையைப் பெற்றுக் கொள்வது அவசியமென அமைச்சரவை அறிவித்துள்ளது. இந்நிலையில், அமைச்சரவையின் செயலாளர் விசேட குழு ஒன்றை இதற்காக நியமித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அந்த வகையில் ரயில்வே முன்னாள் பொது முகாமையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களை கொண்டதாக இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தீர்மானம் மிக விரைவில் கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மின்சாரத்தில் இயங்கும் பஸ் சேவை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வருட இறுதியில் அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்