பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உமர் ஃபாரூக் பர்கி நவம்பர் 05 முதல் 08 வரை கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு இராணுவ, அரசியல் மற்றும் சமூக நலன் சார்ந்த பிரமுகர்களை சந்தித்தார்.
அத்துடன் பொத்துவில் மற்றும் ஒலுவில் பிரதேச வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பைகளையும் பாடசாலைகளுக்கு தளபாடங்களையும் வழங்கி வைத்தார்.
இன, மத, பேதமின்றி சமூக நலன், நட்பு மற்றும் இலங்கை சமூகத்திற்கான ஆதரவிற்கான பாகிஸ்தானின் அர்ப்பணிப்பை இந்நிகழ்வு பிரதிபலிக்கிறது.
மற்றுமொரு நிகழ்வில், உயர் ஸ்தானிகர் கல்முனைக்குடி பிரதேசத்தில் உள்ள விதவைகள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி வைத்தார். கிழக்கு மாகாண மக்களின் அமோக வரவேற்புக்கு உயர் ஸ்தானிகர் நன்றி தெரிவித்ததோடு இலங்கை மக்களின் நலனுக்காக பாகிஸ்தான் எப்போதும் ஆதரவாக நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். சுற்றுலா, உள்ளூர் சிறு வணிகம், ஹோட்டல் துறை, கடல் அலைச்சறுக்கு போன்ற துறைகளில் கிழக்கு மாகாணத்தில் பாரிய வாய்ப்புகள் நிறைந்துள்ளதாக உயர் ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார். பாகிஸ்தானும் இலங்கையும் ஒன்றிணைந்து பரஸ்பர இருதரப்பு ஆர்வமுள்ள பல துறைகளில் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தின் போது உயர் ஸ்தானிகர் பானமவில் தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியையும் திருகோணமலையில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியையும் சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்த பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.
கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஸாரப் மற்றும் ரஹ்மத் அறக்கட்டளையின் தலைவர் அப்துல் ரகுமான் மன்சூர் ஆகியோர் உயர்ஸ்தானிகரின் இந்த நிகழ்வுகளுக்கு தேவையான ஒருங்கிணைப்புகளை மேற்கொண்டிருந்தனர்.