வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வடமாகாண அபிவிருத்திக்காக பாரியளவில் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
வன்னி மாவட்ட மக்கள் எதிர்கொண்டுவரும் காணிப்பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சவால்களை எதிர்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பாரியளவில் நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளார்.
குறிப்பாக கடற்றொழிலை அபிவிருத்தி செய்வதற்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதன் மூலம் வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு பல நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
வன்னி மாவட்ட மக்கள் நீண்டகாலமாக காணிப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் 20 இலட்சம் குடும்பங்களுக்கு காணி வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதேபோன்று விவசாயிகளுக்கு காணி வழங்குவதற்கு 2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது.
எமது பகுதியை பொறுத்தவரையில் காணி பிரச்சினை என்பது பாரிய பிரச்சினையாகும். என்றாலும் ஜனாதிபதி அதனை உணர்ந்து அந்த பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் வரமாகும். மேலும் கிராமிய பாதைகளை புதுப்பிப்பதற்காக வரவு செலவு திட்டம் மூலம் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்படாமல் உள்ள எமது பிரதேச கிராமிய பாதைகளை புதுப்பிக்க இந்நிதியிலிருந்து ஒரு பில்லியனாவது வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மல்வத்து ஓயாவை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதன் மூலம் வவுனியா மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினை நிவர்த்தி செய்யப்படும். மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு 3 போகங்களுக்கும் போதுமான நீர் கிடைத்து வருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்