நாட்டின் பல இடங்களிலும் மழையுடன் கூடிய கடுமையான இடி, மின்னல் எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
ஆகையால் இடியுடன் மழை பெய்யும் போது, பொதுமக்களை வீடுகளினுள் இருக்குமாறும் மரங்களின் கீழ் செல்லாதிருக்குமாறும் திறந்தவெளியான வயல்வெளி, தேயிலைத் தோட்டம் மற்றும் நீர்நிலைகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை இடியுடன் மழை பெய்யும் போது, கம்பியில் இணைக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் மின்சாதனப் பயன்பாட்டையும் சைக்கிள், டிராக்டர் மற்றும் படகு போன்ற வாகனப் பயன்பாட்டையும் தவிர்க்குமாறும் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழும் அபாய நிலையில் அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறும் பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்றையதினம் (11) நாட்டின் மேல், மத்திய, சப்ரகமுவ, தெற்கு, வடமேல், ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் கண்டி , நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிக மழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் இரவு வேளையில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல் , சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் .
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.