சீன மக்களின் உதவியுடன் வறுமையில் வாழும் மக்களுக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்வு நேற்று (06) யாழ். தென்மராட்சி நாவற்குழி ஸ்ரீ சமித்தி சுமன விகாரையில் இடம்பெற்றிருந்தது.
நாவற்குழி ஸ்ரீ சமித்தி சுமன விகாரையின் தலைவர் ரத்னஸ்ரீ தேரர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் சீனத் தூதுவர் கி சென்ஹொங் கலந்து கொண்டு நாவற்குழியில் உள்ள தேவைப்பாடுடைய சிங்கள மற்றும் தமிழ் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்திருந்தார்.
மேற்படி உதவித்திட்டம் சீனாவின் புத்த சங்கம், இலங்கை மற்றும் சீன பௌத்த நட்புறவுச் சங்கம் ஊடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து காரைநகர் சாம்பலோடை பிரதேசத்தில் சீன அரசின் உதவியுடன் அமையவுள்ள நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தினை இலங்கைக்கான சீனத்தூதுவர் பார்வையிட்டுள்ளார். அதன்போது உள்ளூராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச சபை செயலாளர் , உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வளாகத்தை பார்வையிட்ட பின்னர், சீன அரசாங்கத்தின் உதவித் திட்டம் தொடர்பில் தூதுவர் மக்களுக்கு விளக்கமளித்ததுடன் பொதுமக்களின் தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.
இந் நிகழ்வில் சீனத்தூதுவர் பொதுமக்கள் மாலை மற்றும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ். விசேட நிருபர்