இஸ்ரேல் – பலஸ்தீன யுத்த மோதல்கள் காரணமாக காசா பகுதியில் இடம்பெயர்ந்துள்ள இலங்கையைச் சேர்ந்த 17 பேரில் 15 பேர் ரஃபா எல்லை ஊடாக எகிப்தை சென்றடையவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 17 பேரில் 15 பேர் இன்று (02) ரஃபா எல்லை ஊடாக எகிப்தை சென்றடையவுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாபா தெரிவித்துள்ளார்.
எகிப்து தூதரகத்தின் ஊடாக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக, காமினி செனரத் யாபா தெரிவித்தார்.
பலஸ்தீன் – எகிப்து இடையிலான ரஃபா எல்லை ஊடாக, காசாவிலிருந்து வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ள, வெளிநாட்டவர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட 596 பேரில் இலங்கையர்கள் 17 பேர் உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.