உபாதை காரணமாக உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தில் இருந்து வெளியேறிய இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரணவுக்கு பதில் அனுபவ சகலதுறை வீரர் அஞ்சலோ மத்தியூஸ் அழைக்கப்பட்டுள்ளார்.
இதற்காக அவரது பெயர் சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸிலின் தொழில்நுட்ப குழுவிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ஒப்புதல் அளித்த பின்னரே அவர் இலங்கை குழாத்தில் இணைக்கப்படவிருந்தார்.
இலங்கை குழாத்தில் மேலதிக வீரர்களாக அஞ்சலோ மத்தியூஸுடன் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பலவீனமடைந்திருக்கும் இலங்கையின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் வகையில் மத்தியூஸை அணியில் சேர்ப்பதற்கு அணி நிர்வாகம் நேற்று (24) தீர்மானித்தது.
மத்தியூஸை இணைப்பதற்கு ஐ.சி.சி தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபையின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்திருந்தார்.
மதீஷ பதிரணவின் வலது தோள்பட்டையிலேயே காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஆரம்பத்தில் பத்து நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டபோதும் அதனைத் தொடர்ந்தும் அவரின் பந்துவீசும் கையில் வலி இருந்தது. இதனை அடுத்தே அவரை அணியில் இருந்து நீக்குவதற்கு ஐ.சி.சி தொழில்நுட்ப குழுவிடம் பரிந்துரை செய்யப்பட்டது.
இதற்காக ஐ.சி.சி ஒப்புதல் கிடைத்ததை அடுத்து அவர் நேற்று இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பினார். எனினும் பதிரண ஆடிய முதல் இரு உலகக் கிண்ணப் போட்டிகளிலும் 90 அல்லது அதற்கு மேல் ஓட்டங்களை விட்டுக்கொடுத்து சோபிக்கத் தவறி இருந்தார்.
ஏற்கனவே இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்கவும் முன் தொடை பகுதியில் ஏற்பட்ட உபாதையால் அணியில் இருந்து நீக்கப்பட்டதோடு அவருக்கு பதில் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன அணியில் இணைக்கப்பட்டபோதும் அவர் எதிர்பார்க்கப்பட்ட அளவு சோபிக்கத் தவறி வருகிறார்.
மறுபுறம் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷனவின் பின் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கும் சூழலில் அவர் நாளை நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் இருந்து வருகிறது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டி நாளை பெங்களுர், சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் அனுபவ வீரரான மத்தியுஸ் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற போட்டிக்குப் பின்னர் மத்தியூ இலங்கை ஒருநாள் அணிக்காக விளையாடியதில்லை. அவர் இலங்கை அணி தேர்வுக்காகவும் இடம்பெறவில்லை. எனினும் மத்திய வரிசையில் ஏற்பட்டிருக்கும் சிக்கல் அவரை மீண்டும் அணிக்கு அழைக்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கிண்ணத்தில் இதுவரை நான்கு போட்டிகளில் ஆடியிருக்கும் இலங்கை அணி ஒன்றில் மத்திரம் வென்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது.