எப்பாவல கட்டியாவ யாய 01 பகுதியில் வீட்டுத்தோட்டத்தில் கிணறு வெட்டும் போர்வையில் புதையல் தோண்டிக் கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் இராணுவ பொலிஸ் பிரிவில் பணிபுரியும் சாதாரண உறுப்பினர் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய நேற்று முன்தினம் (20) எப்பாவல கட்டியாவ புராதான வீட்டுத்தோட்டத்தில் பழங்கால கற்களை அகற்றி புதையல் தோண்டிக் கொண்டிருந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
எப்பாவல பகுதியைச் சேர்ந்த இராணுவ பொலிஸ் பிரிவில் பணிபுரியும் சாதாரண உறுப்பினர் ஒருவரும் ஹிங்குராக்கொட மற்றும் கட்டுநாயக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேகநபர்களையே பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் புதையல் தோண்டுவதற்காக பயண்படுத்திய மண்வெட்டி, அலவாங்கு, சுத்தியல் உள்ளிட்ட உபகரணங்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை தம்புத்தேகம நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்