செவிப்புலனற்ற நபர்களுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் (இலகுரக வாகனங்கள்) வழங்கியுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள செவிப்புலனற்றோர் மத்திய சங்கம் உட்பட பல தரப்பினர் சுமார் 04 தசாப்தங்களாக விசேட தேவையுடைய (பேச்சாற்றலற்ற) வர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குமாறு கோரிய போதிலும், அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டே வந்துள்ளது.
இதன்படி, செவிப்புலனற்றோர் மத்திய சங்கம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம், தேசிய வீதி பாதுகாப்பு சபை, கண், காது, மூக்கு மற்றும் தொண்டை வைத்திய நிபுணர்கள் சங்கம் மற்றும் பொலிஸ் உட்பட பல தரப்பினர் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவுடன் கலந்துரையாடிய பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ்,போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இதையடுத்து,கம்பஹா மாவட்டத்தில் விசேட தேவையுடையவர்களை (பேச்சாற்றலற்ற) கண்டறியும் முன்னோடித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இச்செயற்திட்ட வெற்றியின் அடிப்படையில், நாடளாவிய ரீதியில் விசேட தேவையுடைய (செவிப்புலனற்ற) வர்களுக்கு இதனை வழங்குவதற்கு அனுமதி பெறப்பட்டது.
கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட முன்னோடித் திட்டத்தின் இரண்டாம் கட்டம், குருநாகல் மாநகர சபை மண்டபத்தில் செயற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சுமார்,செவிப்புலனற்ற 250 பேர் கலந்துகொண்டனர்.இதில் 160 பேர் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் (இலகுரக வாகனங்கள்) வழங்கப்பட்டது.
நிகழ்வில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, விவசாய இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத், வடமேல் மாகாண பிரதம செயலாளர் அரியரத்ன, குருநாகல் மாவட்ட செயலாளர், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நிஷங்க அனுருத்த வீரசிங்க, தலைவர் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தர்ஷன அபேரத்ன, செவிப்புலனற்றோர் மத்திய சம்மேளனத்தின் தலைவர் பிரியன் பிரியந்த ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.