தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய நிலையில், விபத்துக்குள்ளான மாணவனை பொலிஸார் காப்பாற்றி இரண்டாம் பாகத்தையும் எழுத வைத்துள்ளனர்.
காயமடைந்த மாணவனை அவசரமாக காரில் அழைத்துச் சென்ற பொலிஸார் சிகிச்சைக்குட்படுத்தியதால், இரண்டாம் பாகத்தையும் எழுத மாணவனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இச்சம்பவம் கொழும்பின் புறநகர் பகுதியான பொரலஸ்கமுவவில் இடம்பெற்றது.இதுபற்றித் தெரியவருவதாவது:
நிலிஷா தேஷாஞ்சன என்ற மாணவன் பொரலஸ்கமுவ மகா வித்தியாலயத்தில்,தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளை எழுதி முடித்திருந்தார். இடைவேளையில்,சக மாணவனுடன் கழிவறைக்கு சென்றபோது கால் இடறி விழுந்ததால் இம்மாணவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.இந்நிலையில், பரீட்சை பாதுகாப்பு கடமைகளுக்காக வந்த உப பொலிஸ் பரிசோதகர் தர்மதாச எகொட ஆராச்சி, மாணவனை தனது காரில் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.
மருத்துவர்களிடம் நிலைலையை விளக்கியதால், மாணவனுக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்டது.மீண்டும் பரீட்சைக்கு வந்த இம்மாணவனுக்கு மேலதிக நேரம் ஒதுக்கப்பட்டு பரீட்சை எழுத சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. பொலிஸாரின் இச்செயலுக்கு சகலரும் நன்றி தெரிவித்தனர்.