கல்வித்துறையில் மாணவர்களை சிறப்பாக வழிகாட்ட வேண்டும் என்ற தூரநோக்கில் ‘நௌஸர் பௌஸி’ கல்வி அபிவிருத்தி நிலையம் உருவாக்கப்பட்டு இன்று அந்நிறுவனத்தினால் இலவசமான முறையில் மாணவ, மாணவிகளுக்கு இலவச கம்பியூட்டர் பயிற்சி வகுப்புகளை (IT) வழங்கி வருவதாக கல்வி நிலைய ஸ்தாபகர் நௌஸர் பௌஸி தினகரனுக்கு தெரிவித்தார்.
கொழும்பு, மருதானையில் இயங்கி வரும் மேற்படி கல்வி நிலைய நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு முதலில் எமது நிறுவனம் மாணவர்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கொழும்பு நகரைச் சூழ வாழ்கின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு மேற்படி கற்கைநெறியை முன்னெடுத்து வருகிறது.
முதலில் தரம் 09, 10, 11 ஆகிய வகுப்புகளில் கற்கும் பாடசாலை மாணவர்களை இணைத்து அவர்களுக்கு பாடசாலை பாடவிதானத்தை அடிப்படையாகக் கொண்டு, தகவல் தொழில்நுட்பத்துறை (I.T) வழிகாட்டல்களை அந்நிறுவனம் வழங்கி வருகிறது.
இன்று மேற்படி கல்வி நிறுவனத்தில் மாணவ மாணவியர் 200 பேர் தகவல் தொழில்நுட்பத்துறையில் பயின்று வருகிறார்கள். மேலும் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வியைத் தொடர விண்ணப்பித்திருக்கிறார்கள். தற்போது கற்கின்ற கொழும்பைச் சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த மூவின மாணவ, மாணவிகளும் மிகவும் சிறப்பாக முழுமையான பாதுகாப்புடன் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஒரு மாணவனையாவது உருவாக்க வேண்டும் என்ற நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியிலேயே தனது கல்வி நிறுவனம் செயற்பட்டு வருவதாக நெளஸர் பௌஸி தெரிவித்தார். எதிர்காலத்தில் கொழும்பின் சில பகுதிகளிலும் எமது நிறுவன கிளைகளை உருவாக்கி எதிர்கால மாணவ சமூகத்திற்கு கல்வித்துறையில் சிறந்த சேவைகளை வழங்கி அவர்களை எமது நிறுவனம் ஊக்கப்படுத்த திட்டமிட்டுள்ளதோடு, தேவையேற்படின் வெளிநாடுகளிலும் அவர்கள் கல்வி பயில மற்றும் தொழில்வாய்ப்பை இலவசமாக பெற்றுக்கொடுக்க நிறுவனம் நடவடிக்கை எடுக்குமெனவும் நௌஸர் பௌஸி தெரிவித்தார்.
- –அஜ்வாத் பாஸி