கடந்த நாட்களில் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் 4 பேரை பொலிஸார் நேற்று (10) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் கொட்டாஞ்சேனை, பேருவளை, அம்பன்பொல ஆகிய இடங்களில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களாவர்.
நேற்று முன்தினம் (09) இரவு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ரீ குணானந்த மாவத்தை மின்மாற்றிக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரும் அதற்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபரும் நேற்று (10) கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29 மற்றும் 43 வயதுடைய கொட்டாஞ்சேனை சுமித்ராராம வீதியில் வசிப்பவர்களாவர்.
குறித்த தினத்தன்று உயிரிழந்த நபர் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக அவரை மார்பில் கத்தியால் குத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (08) பேருவளை பொலிஸ் பிரிவில் பேருவளை ஹெட்டிமுல்ல என்ற பிரவசிக்கும் பெண் ஒருவர் வீட்டின் பின்புறம் கிணற்றடியில் சடலமாக மீட்கப்பட்ட கொலை குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை பேருவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது.
குறித்த சந்தேக நபர் 58 வயதுடைய விக்கிலிய, பலாங்கொடை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.
சந்தேக நபர் இறந்தவரின் வீட்டில் வேலை செய்து வந்ததாகவும், சம்பளம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கடந்த வியாழக்கிழமை (05) மாலை, அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிரிய அம்போகம பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் கொலை செய்த சந்தேக நபரை நேற்று அம்பன்பொல பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் திம்பிரிய பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பலொன்று வீட்டில் நடத்திய, மது விருந்தின் போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.