அம்பாறை மாவட்ட செயலகத்தின் நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் மாணவர்கள், அரச அலுவலர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் போன்ற அனைவர் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கே.புண்ணியமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது பாவனையாளர் உரிமைகள், சட்டங்கள், பாதுகாப்பு, பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள், தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்பந்தமாக கல்லூரி மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பிரதான வளவாளராக அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரி இஷட் எம் ஸாஜீத் மற்றும் புலன் விசாரணை அதிகாரி ஏ.ஏ.ஏ ஸர்பான், என்.எம் றிப்கான், ஏ.பீ.எம் றிப்சாத் ஆகியோருடன் கல்லூரியின் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டார்கள்.
(ஒலுவில் மத்திய விசேட நிருபர்)