கதிர்காமத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இ.போ.ச பஸ்ஸொன்றும், கொழும்பிலிருந்து காலி நோக்கிச் சென்ற சொகுசு பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 06 பேர் காயமடைந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தானது பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்த சொகுசு பேருந்தில் பயணித்த ஆறு பேரும் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களில் சாரதியும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த சொகுசுப் பேருந்தின் மீது இ.போ.ச பஸ் மோதியுள்ளதாக இதுவரை இடம்பெற்ற விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து ஏற்பட காரணமான இ.போ.ச பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
விபத்து தொடர்பில் பிரதம பொலிஸ் பரிசோதகர் திரு.லலித் பத்மகுமார அவர்களின் பணிப்புரைக்கமைய போக்குவரத்து பிரிவின் நிலைய கட்டளைத்தளபதி சுரஞ்சித் பெரேரா தலைமையில் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.