அண்மையில் வெளியாகிய க. பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தின் கஷ்டப் பிரதேச பாடசலையான தியாவட்டவான் அறபா வித்தியாலய மாணவர்கள் நான்கு பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர். இரண்டு மாணவிகள் கல்வியல் கல்லூரிக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த மாணவர்களை கௌரவிக்கும் முகாமாக பாடசாலை அதிபர் ஏ.எல்.எம்.இஸ்மாயில் தலைமையிலும் வழிகாட்டலிலும் பாராட்டு விழாவொன்று நடத்தப்பட்டது. சித்தியடைந்த மாணவர்களும், அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து அவர்களுக்கு உணர்வுபூர்வமான வரவேற்பும் கௌரவிப்பும் வழங்கினர். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஜ்மீர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இதன் போது பாடசாலைக்குப் பெருமை சேர்த்துக் கொடுத்த மாணவர்களுக்கும், அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களுக்கும், பாடசாலையில் உயர்தர வகுப்பு நடத்துவதற்கு முயற்சித்த பிரதேச பள்ளிவாயல் நிருவாகம், கல்வி அதிகாரிகள், கிராம அபிவிருத்திச் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் அதிபர் ஏ.எல்.இஸ்மாயில் நன்றி தெரிவித்தார்.