ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்திருக்கும் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சச்சித்ர சேனநாயக்கவை எதிர்வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (15) உத்தரவிட்டது.
விளையாட்டு அமைச்சின் சிறப்பு விசாரணை பிரிவுக்கு சென்ற சச்சித்ர சேனநாயக்க கடந்த செப்டெம்பர் 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் போட்டியின்போது அதில் ஆடும் இரு வீரர்களை டுபாயில் இருந்து தொலைபேசியில் அழைத்து ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுத்த முயற்சித்ததாகவே சச்சித்ர மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தேக நபரை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சச்சித்ர சேனநாயக்கவிடம் குரல் சோதனை மேற்கொள்வதற்காக அவர் அரசாயங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பில் கிடைத்திருக்கும் ஒலி நாடாவுடன் தொடர்புபட்ட குரல் சோதனை ஒன்றுக்காகவே அவர் கடந்த புதன்கிழமை (13) பொலிஸ் பாதுகாப்புடன் அங்கு அழைத்துச் செல்லப்பட்டார். சச்சித்ர இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புபட்டிருப்பதை உறுதி செய்வதற்கு அவர் மீது குரல் சோதனை மேற்கொள்ள உத்தரவிடும்படி சட்டமா அதிபர் நீதிமன்றத்தை கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சித்ர இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்திருப்பதோடு தனது மற்றும் தனது குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த செய்யப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
38 வயதான சச்சித்ர சேனநாயக்க இலங்கை அணிக்காக ஒரு டெஸ்ட், 49 ஒருநாள் மற்றும் 24 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார்.