நாடு வீழ்ந்திருக்கும் இடத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் மக்களை அச்சுறுத்தி நாட்டை மீண்டும் அராஜக நிலைக்கு திருப்ப முற்படும் நபர்கள் தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுப் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன
ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நேற்று (15) காலை கொழும்பு கோட்டையிலுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத் தலைமையகத்தில், இது தொடர்பாக அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முறைப்பாடு செய்ததையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “இலங்கை ரயில்வே திணைக்களத்தில் தொழிற்சங்கம் அல்லாத சிலரால் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக விலைமதிப்பற்ற இளைஞர்களின் உயிர்கள் பலியாகியுள்ளதுடன், பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ குடியிருப்பில் வசிக்கும் இந்திக்க தொடங்கொட என்ற நபர் மிகவும் தவறான ஒன்றைச் செய்தார். நாடு முழுவதும் வன்முறையை ஏற்படுத்தும் அனைத்து வேலைநிறுத்தங்களுக்கும் தொலைநோக்கு பார்வையற்ற அமைச்சரவை அமைச்சரே பொறுப்பென்றும் அமைச்சரின் மோசடி, ஊழல் மற்றும் கவனக்குறைவான செயற்பாடுகளினால் இவையெல்லாம் நடக்கின்றன என்ற கருத்தை சமூகமயமாக்கி, அதன் மூலம் மக்களின் வெறுப்பை எங்கள் மீது திருப்ப முயற்சித்துள்ளார் என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்தேன்” என்றார்.