உலகக் கிண்ண போட்டிக்கான இலங்கையின் 15 பேர் கொண்ட உத்தேச அணியில் காயத்திற்கு உள்ளாகி இருக்கும் வனிந்து ஹசரங்க, துஷ்மன்த சமீர மற்றும் டில்ஷான் மதுஷங்க அகிய முன்னணி பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த மூன்று வீரர்களும் காயம் காரணமாக தற்போது நடைபெற்றுவரும் ஆசிய கிண்ணத் தொடரில் இடம்பெறாத நிலையில் இந்தியாவில் ஒக்டோபர் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணத்திற்காக உடல் தகுதி பெற தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் வலது மார்பு தசை பகுதியில் உபாதைக்கு உள்ளாகி இருக்கும் சமீர தனது உடல் தகுதியை நிரூபிப்பதற்கு எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி பந்து வீச இருப்பதாக கூறப்படுகிறது.
உலகக் கிண்ணத்திற்கான குழாத்தை வெளியிடுவதற்கான காலக்கெடு செப்டெம்பர் 25 ஆம் திகதிக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு முன் அவர் உடல் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் மதுஷங்க மற்றும் ஹசரங்க இருவரும் அணிக்குத் திரும்பும் வாய்ப்பு அதிகம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று இடுப்புப் பகுதியில் உபாதை காரணமாக ஆசிய கிண்ண தொடரில் இருந்து விலகிய மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமாரவும் உடல் தகுதியை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துடுப்பாட்ட வரிசையில் ஆசிய கிண்ணத்தில் ஆடிய அதே வீரர்கள் உத்தேச அணியில் இடம்பெற்றிருக்கும் நிலையில் அனுபவ வீரர் அஞ்சலோ மத்தியுஸ் இடம்பெற தவறியுள்ளார். அதேபோன்று சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்னவுக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.
உத்தேச அணி: தசுன் ஷானக்க (தலைவர்), பத்தும் நிசங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, வனிந்து ஹசரங்க, துனித் வெள்ளாலகே, மஹீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர, கசுன் ராஜித்த, மதீஷ பதிரண, டில்ஷான் மதுஷங்க.