இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து தனிப்பட்ட விடுப்பில் இலங்கையில் இருந்து இந்தியா திரும்பியுள்ளார்.
இதனால் நேற்று (04) நடைபெற்ற நேபாள அணிக்கு எதிரான இந்தியாவின் ஆசிய கிண்ண குழுநிலை போட்டியில் பும்ரா இடம்பெறவில்லை. அவருக்கு பதில் மொஹமட் ஷமி அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். தான் தந்தையாகி இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை பும்ரா தனது இன்ஸ்டகிரம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “இன்று காலை (திங்கட்கிழமை) அங்கட் ஜஸ்பிரீத் பும்ரா இவ்வுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்,” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2021 மார்ச் மாதம் பும்ராவிற்கும் சஞ்சனா கணேசன் என்பவருக்கும் கோவாவில் திருமணம் நடந்தது.
பும்ரா கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் உபாதைகளுக்கு முகங்கொடுத்திருந்ததுடன், கடந்த மாதம் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் உபாதையிலிருந்து குணமடைந்து மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பியிருந்தார்.