இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை கொண்ட ‘800’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சிக்கு இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அழைக்கப்பட்டுள்ளார்.
இந்தத் திரைப்பட முன்னோட்ட நிகழ்வு இன்று (05) மும்பையில் இடம்பெறவுள்ளது. 51 வயதான முரளிதரன் 2010 ஜூலை 22 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது 800 ஆவது விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வுக்கு விடைகொடுத்தார். அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த மதிமலர் ராமமூர்த்தியை 2005 ஆம் ஆண்டு திருமணம் புரிந்தார்.
திரைப்படத்தில் முரளி மற்றும் அவரது மனைவியின் பாத்திரங்களில் மதுர் மிட்டல் மற்றும் மஹிமா நம்பியார் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இந்தியா, இலங்கை மற்றும் இங்கிலாந்தில் எடுக்கப்பட்டுள்ளன.
திரைப்பட முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சிக்கு திரைப்படக் குழுவுடன் முரளிதரனும் தோன்றவுள்ளார். இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜனசூரியவும் இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.