நாட்டில் நிலவும் கடும் வரட்சி நீங்க, மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளில் ஒன்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் நிலவும் தொடர்ச்சியான கடும் வரட்சி நிலமை காரணமாக வாகரை வடக்கு, மண்முனை மேற்கு, வெல்லாவெளி, மண்முனை தென்மேற்கு, உள்ளிட்ட, பிரதேச செயலக பிரிவுகள் அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை படுவான்கரை பகுதியிலும் அதிக அளவிலான மக்கள் இந்த கடும் வரட்சி நிலமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் தங்களது விவசாயச் செய்கை மற்றும் கால்நடை வளர்ப்புகள். வாழ்வாதார தொழில்களை பாதுகாக்கும் பொருட்டு வவுணதிவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் தத்தமது குலதெய்வம் கோயில் வழிபாடுகளில் ஞாயிற்றுக்கிழமை(21.08.2023) ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது. மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள கிராமங்களில் 1800 குடும்பங்கள் இந்த வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயத்திமலை ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் பிரதேசத்தில் உள்ள வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நிரந்தர தீர்வு வாக மழை வேண்டியும், வழிபாடுகளிலும் நேர்த்திக்கடன்களிலும், ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது. தமது குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து, நெய் விளக்கேற்றி, தேங்காய் உடைத்து, பூஜை தட்டுகளை தானமாக வழங்கி அங்குள்ள ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டனர். தமது குலதெய்வ வழிபாட்டின் மூலம் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பது அப்பகுதி மக்களின் ஐதீகமாகும்.
(வீடியோ: பெரியபோரதீவு தினகரன் நிருபர் – வ. சக்திவேல்)