இந்தியாவின் 77ஆவது சுதந்திர தினம் நேற்று ஓகஸ்ட் 15 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் உத்வேகத்துடன் கொண்டாடப்பட்டது.
கொழும்பில் பிரதான நிகழ்வு இந்திய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்த உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அணிவகுப்பு மரியாதையினையும் பார்வையிட்டிருந்தார்.
அத்துடன் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ஜனாதிபதியினால் மக்களுக்காக ஆற்றப்பட்டிருந்த உரையின் முக்கிய அம்சங்களும் உயர் ஸ்தானிகரால் இச்சந்தர்ப்பத்தில் வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பல நூற்றுக்கணக்கான இந்தியர்கள் இந்நிகழ்வில் பங்கு பற்றியிருந்தனர். இந்நிகழ்வுகளின் விசேட அம்சமாக ஐந்து முக்கிய அம்சங்களுக்கான உறுதிமொழி உயர் ஸ்தானிகரால் நிர்வகிக்கப்பட்டதுடன் அங்கு சமூகமளித்திருந்த அனைவரும் 2047 ஆம் ஆண்டில் இந்தியாவை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதற்கு திட சங்கற்பம் மேற்கொண்டதுடன் தேசத்தை கட்டி எழுப்புவதற்கும் தமது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியிருந்தனர்.
பல்வேறு கலாசார நிகழ்வுகள் இக்கொண்டாட்டங்களுக்கு மேலும் மெருகூட்டியிருந்தன. தேசப்பற்று மற்றும் வீரத்தினை பிரதிபலிக்கும் இசை மெட்டுகள் இலங்கை கடற்படையின் இசைக் குழுவினரால் இச்சந்தர்ப்பத்தில் இசைக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் மாணவர்கள் “வைஷ்ணவ ஜனதோ” என்ற பாடலுக்கு பரத நாட்டிய ஆற்றுகையையும் அதே போல “வந்தே மாதரம்” பாடலுக்கு இந்திய மற்றும் இலங்கை நடன வகைகள் சங்கமித்த நடன நிகழ்வையும் அரங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இலங்கையில் சமாதானம் மற்றும் ஐக்கியத்தினை பாதுகாப்பதற்காக உயிர்த்தியாகம் செய்த இந்திய அமைதிகாக்கும் படையினரின் நினைவுத்தூபியில் உயர் ஸ்தானிகரும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஏனைய அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதேவேளை கண்டியில் உள்ள உதவி உயர் ஸ்தானிகராலயம், யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டையில் உள்ள கொன்சுலேட் ஜெனரல் காரியாலயங்கள் ஆகியவற்றாலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
இந்தியாவின் 75 வருடகால முன்னேற்றம் மற்றும் சுய சார்பு ஆகியவை குறித்து முன்னெடுக்கப்பட்ட உலகளாவிய ரீதியிலான செயற்திட்டமான “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்” இந்த சுதந்திர தினத்தில் முழுமையடைகின்றது.
இந்நிலையில் 2047 ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்காக “அம்ரித் கால்” எனப்படும் 25 வருடகால இந்திய வளர்ச்சிப் பயணத்தில் 2022 முதல் இந்தியா இணைந்துள்ளது.
“ஹர் கர் திரங்கா” முன்னெடுப்பில் பங்குகொண்டமை, இந்தியாவில் தாம் வளர்ந்த நினைவுகளை பகிர்தல், “மெறி மாற்றி மேரா தேஷ்” பிரசாரத்தின் கீழ் தாய் நாட்டுக்கு மரியாதை செலுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்திய சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சுதந்திர தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.