விண்டூர மழை பொழியுஞ் சிறப்பதனால் வளம் மலிந்து மிகுந்து தோன்றும்
மண்டூரில் உறை முருகன் மலரடிக்கோர் திருப்பதிகம் மரபிற் சொற்றான்
கண்டூமினிய மொழிப் பெரியதம்பிப்பிள்ளை எனும் கலை வல்லோனே’
எனும் பாடலானது வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாற் பாடப் பெற்றது. இப்பாடலிலே அனைத்து வரிகளும் மண்டூர் பதியின் சிறப்பை செப்பி நிற்கின்றன. மண்டூர் கவிஞர் பெருமானாகிய புலவர் மணிப்பெரியதம்பிப்பிள்ளை 1922ஆம் ஆண்டில் வெளியீடு செய்த மண்டூர்ப்பதிகம் எனும் கவிதை சிறப்புப் பெற்று விளங்குகின்றன. இவற்றினை பண்டிதர் வி.சி. கந்தையா தமது சைவக்கோயில் எனும் நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு வாவியின் தெற்குப்புறத்தே வாவிக் கரையோரமாக அமைந்துள்ள ஒரு பாரம்பரிய விவசாயக் கிராமம் மண்டூராகும். இங்குஅமைந்திருக்கின்றமுருகன் ஆலயம் ‘சின்னக்கதிர்காமம்’ என்று சிறப்பு பெற்றது. கிழக்கிலங்கையின் திருப்படைக் கோயில்களில் அல்லது தேசத்துக் கோயில்களில் ஒன்றாகும். இந்த ஆலயம் பண்டையமன்னர்களின் மதிப்பும் மானியங்களும் நிருவாக அமைப்பும் பெற்றதாகக் கொள்ளப்படுகின்றது. முற்காலத்தில் வகுக்கப்பட்ட நிருவாகஅமைப்பும் பழைய வழிபாட்டு பூசை மரபுகளும் இன்றுவரை மாற்றமின்றி பேணப்பட்டு கட்டிக் காத்து வருவதே இவ்வாலயத்தின் சிறப்புமிக்க தொன்றாக காணப்படுகின்றன.
ஆலயவரலாறு
முருகன் சூரனைகொல்லவிட்டவேலானதுவாகூரமலையைப் பிளந்து மூன்றுகுளம்,கல்லிக் கடலில் வீழ்ந்தபோதுஎழுந்ததீப்பொறிகளில் ஒன்றுஉகந்தமலையுச்சியிலும்,மற்றயவைவெள்ளைநாவற்பதி (திருக்கோவிலிலும்) மற்றையதீப்பொறிதில்லைமரத்தில் தங்கியதாகஐதீகக் கதைஎடுத்துக்காட்டுகின்றது. மண்டூரில் இவ்வாறு இடம்பெற்றவேலாயுதமானது மரத்தில் தங்கியிருந்தபோதுஅப்பகுதியில் வாழ்ந்தவேடர்கள் அதனைக் பாதுகாத்துபோற்றிமனபக்தியோடுபூசைசெய்துவழிபட்டுவரலாயினர் இதன் பின்னர் மட்டக்களப்புவாவியில் மீன்பிடிப்பதற்குவந்து இளைப்பாறுவதற்குகரைசேர்ந்தபோதுதுறைநீலாவனைச் சீர்பாதகுலத்தார் சிலரும் அவ்வேடருடன் சேர்ந்துவழிபட்டுசிறப்பித்துள்ளனர் என்றுகர்ணபரம்பரைக் கதையில் இருந்துஅறியக்கிடைக்கின்றன.
மட்டக்களப்பின் கிழக்குப் பகுதியிலே முக்குவ வன்னிமைகள் சிற்றரசர்களாக இருந்தனர் என்று சரித்திரக் கூற்று எடுத்துக்காட்டுகின்றது. அன்னாருடைய அங்கிகாரமும் அதிகாரமும் பெற்றுக் கொள்ளுதல் பொதுத் தலங்களுக்கெல்லாம் நிதியும் சிறப்புமாக இருந்தமையால் அதன்படி தேசத்தலைவனான முக்குவ வன்னிமையின் தலைமையில் கோவில் அமைப்பும் நிருவாக ஒழுங்குகளும் வகுக்கப்பெற்றன. அன்னாரால் பல மானியங்களும் கோவில் பரிபாலனத்திற்காக வழங்கப் பெற்றிருந்தன. எனவே வன்னிமையின் திட்டத்தின்படி கவுத்தன் குடிவேளாளர் குலத்தினர் கோயில் பரிபாலனத்திற்காக கோரக்களப்பில் இருந்து குடியமர்த்தி வண்ணக்கர் பதவியினையும்,சுவாமி தூக்குதல் போன்ற பொறுப்புகளை வழங்கி நடைமுறைப்படுத்தியிருந்தனர்.
தில்லைமண்டூர் முருகன் அருள் வளத்தினால் நிலவளமும்; மற்றும் பொருள் வளமும் கோயிலில் அதிகமாக கிடைக்கப் பெற்றதாலேஆலய சொத்துக்களின் வரவு செலவுகளை ஒழுங்குபடுத்துவதற்கு முக்கியமல்லாத செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்குமாக நான்கு கணக்குப் பிள்ளைகளை நியமனம் பெறும் ஒழுங்கும் தேசத்து வன்னிமைகளால் திட்டமிடப்பட்டது. இக்கோயிலின் அயற் கிராமங்களும் அக்கோவில் வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தோர் வாழ்பதிகளுமானதுறைநீலாவனைகுருமன்வெளிகோட்டைக்கல்லாறு,பெரியகல்லாறுஎன்னும் நான்குகிராமங்களிருந்துமே இவர்களின் நியமனம் இடம்பெற்றிருந்தன. பெரியகப்புகன் உரித்துசீர்பாதர் குலத்தில் ஒரு குடியான சிந்தாத்திர குடியினருக்கும் பூசைக் கப்புகன் உரித்து சிங்களக் குடியினருக்கும் கவுடாக்காரன், கங்காணிபதவிகளும், தரை கூட்டுதல், கழுவுதல்,பொருட்களை கழுவுதல்,சந்தனம் அரைத்தல், நெல்குற்றல்,மா இடித்தல், அமுது செய்தல் என உள் வெளிப் பணிகளும் கோயிலருக்கும் என்று வலுவான திட்டம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கவையாகும்.
ஆலயத்தின் அமைவிடம்
மண்டூர் ஸ்ரீ முருகன் ஆலயமானது கதிர்காமத்தை போன்றதாகவே தெற்கு புறத்தே வாசலைக் கொண்டு பழமை மாறாது மட ஆலயமாகவே எளிதான முறையில் அமைந்துள்ளதுடன் உள்ளே பிள்ளையார் ஆலயமும், நாகதம்பிரான் ஆலயம் ஏனைய பரிபால மூர்த்திகளுக்குரிய ஆலயம் அமைந்துள்ளதுடன் வாசல் முன்பாக கொத்து பந்தல் அமைத்து அழகுபடுத்தும் காட்சிகளும் வெளிவீதியில் தெய்வானை அம்மன் ஆலயமும், வள்ளியம்மன் ஆலயமும் அமையப் பெற்றுள்ளதுடன் அன்னதான மடங்களும் சிறப்பாக அமையப் பெற்றுள்ளன.
ஆலய பூசை முறைகள்
இவ்வாலயத்தில் பூசைமுறையானது கதிர்காமத்தை போலவே மௌனபூசை இடம்பெறுகின்றது. கதிர்காமத்தில் ‘கப்புறாளை’ அவர்கள் மேற்கொள்ள மண்டூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் ‘கப்புகனார்’ அவர்களால் வாய்க்கு துணிகட்டி மூல மூர்த்தியின் திரை திறக்கப்படமால் பூசைகள் நடைபெறுகின்றன. கதிர்காமத்தை போன்ற சகல விடயங்களும் அமையப்பெற்றுள்ளதால் இவ்வாலயத்தை சின்னக் கதிர்காமம் என்றே குறிப்பிடுகின்றனர்.
இத்தகையசிறப்புமிக்க மண்டூர் முருகன் ஆலயத்தின் உற்சவம் கதிர்காமத் தீர்த்தோற்சவம் முடிந்து பத்தாம் நாள் அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 21ஆம் நாள் ஆவணி மாத பூரணைத் தினத்தில் தீர்த்த நாளாகக் கொண்டு உற்சவ திருவிழாக்கள் நடைபெறகின்றன. இந்த வகையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழாக்கள் ஆரம்பமாகி தொடர்ந்து 21 நாட்கள் நடைபெற்று 30.08.2023 ஆம் திகதியன்று தீர்த்தோற்சவம் இடம் பெறவுள்ளன. எனவே இத்தகைய மகிமை பொருந்தியதில்லை மண்டூர் முருகன் ஆலயத்தின் உற்சவகாலங்களில் அடியார்கள் வருகைதந்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி அவனருள் பெறுக.
கலைச்சுடரர், இலக்கிய வித்தகர்
நாராயணபிள்ளை நாகேந்திரன்
ஓய்வு நிலை அதிபர்
களுவாஞ்சிகுடி