பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வி அந்நாட்டு பாராளுமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் அரசியல், பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வரும் சூழலில் அடுத்த பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் கடந்த புதனன்று (9) ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
வரும் சனிக்கிழமை (12), பாராளுமன்றத்தின் ஐந்தாண்டு காலத் தவணை நிறைவடைவதை அவர் அதில் சுட்டிக்காட்டி இருந்தார்.
பாகிஸ்தானில், 3 மாதங்களுக்குள் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், அடுத்த ஆண்டு ஆரம்பம் வரை வாக்கெடுப்பு தள்ளிப்போடப்படலாம் என்று தெரிகிறது.
புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஏற்ப, நூற்றுக்கணக்கான தொகுதி எல்லைகளை மறுவரையறை செய்யவிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஒத்திவைக்கப்படுவதால் மக்களின் கோபம் அதிகரிக்கலாம். அது அரசியல் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இன்னும் 3 நாட்களில் அரசாங்கம் இடைக்காலப் பிரதமரைத் தெரிவு செய்ய வேண்டும். அவர் பாகிஸ்தான் பொதுத் தேர்தல் ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவார்.