லிஸ்பன் நகரில்1998 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 08 ஆம் திகதி முதல் 12ம் திகதி வரை நடைபெற்ற உலக நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் குழு மாநாட்டில் சர்வதேச ரீதியில் இளைஞர்களின் பிரச்சினைகளையும், இளைஞர்களின் செயல்பாடுகளையும் கவனத்திற் கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கான சர்வதேச தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்டது.
இதன்படி 1999 டிசம்பர் 17 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 54/120/ (resolution 54/120) இலக்க பிரேரணைப்படி சர்வதேச இளைஞர் தினம் ஓகஸ்ட் 12 ஆம் திகதி கொண்டாடப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய 2000 ஆம் ஆண்டு முதல் சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபை 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்டவர்களை இளைஞர்கள் என வரையறுத்துள்ளது.
உலக சமூகத்தில் இளைஞர்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதும், தத்தமது சமூகங்களுக்கு சாதகமான பங்களிப்பை வழங்கும் வகையில் அவர்களது செயற்பாடுகளை ஊக்குவிப்பதும் சர்வதேச இளைஞர் தினத்தை அனுஷ்டிப்பதன் நோக்கமாகும்.
அத்துடன் கல்வி, அரசியலில் பங்கு, வேலைவாய்ப்பு போன்றவற்றை இளைஞர்களுக்கு ஒவ்வொரு அரசும் சரியான விதத்தில் ஏற்படுத்தித் தரவேண்டும். சுமார் 20 சதவீதமான இளைஞர்கள் ஒவ்வொரு வருடமும் மனஉளைச்சலால் பாதிக்கப்படுகின்றனர் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இளைஞர்களை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி சிறந்த எதிர்காலத்திற்கு வழிகாட்டுவதும் அத்துடன் இளைஞர்கள், பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். திறமைகளை வளர்த்துக்கொண்டு, நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும்.
உலகளவில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாளர்களாக இளைஞர்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க ஆண்டுதோறும் ஓகஸ்ட் 12 இல் சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்படுகிறது.
2023 ஆம் ஆண்டில், சர்வதேச இளைஞர் தினத்திற்கான கருப்பொருள் ‘இளைஞருக்கான பசுமைத் திறன்கள்: நிலையான உலகை நோக்கி’ (Green Skills for Youth: Towards a Sustainable World) என்பதாகும்.
எம்.ஐ.எம்.அஸ்ஹர்…
(மாளிகைக்காடு குறூப் நிருபர்)