மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் மறைந்த ஏ.ஜே.எம். பாயிஸ் கொழும்பு பிரதேச மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக இன, மத பேதங்கள் பாராது பணியாற்றினார். மேல்மாகாண சபையின் கொழும்பு மாவட்ட உறுப்பினராக இருந்து தனது ஆற்றலினால் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலைக்கும் இரண்டு மாடிக்கட்டடங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
அன்னார் முன்மாதிரியான சிறந்த மக்கள் சேவகன் ஆவார். மக்களை நேசித்து வாழ்ந்த அரசியல் பிரதிநிதிகளுக்கு இவர் சிறந்த முன்மாதிரியான ஒருவராக பிரகாசித்தார். எல்லோருடனும் எளிதாகப் பழகி ‘மந்திரிதுமா’ என மக்களால் நேசிக்கப்பட்டவர்.
இவர் கடந்த புதன்கிழமை காலையில் மக்கள் குறை கண்டறிந்து நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் பணியில் ஈடுபட்ட பின்னர் மாலையில் கொம்பனித் தெரு பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீர் மாரடைப்பு காரணமாக கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு காலமானா ர்.
ஜனநாயக ஐக்கிய முன்னணியின் கொழும்பு மாநகராட்சி உறுப்பினராக 2006 ஆம் ஆண்டில் அரசியலில் பிரவேசித்த இவர், 2009 ஆண்டில் மேல்மாகாண சபைக்கான உறுப்பினராக தெரிவானார். மீண்டும் 2014 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் களமிறங்கி அக்கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் ஏக உறுப்பினராக தெரிவானார். இவர் சமூக மற்றும் தமிழ்மொழி பாடசாலை விடயங்களில் செயலாற்றினர். இவர் மேல்மாகாண சபை உறுப்பினராகப் பதவி வகித்த காலத்தில் கொழும்பு மாநகராட்சி பிரிவிலுள்ள சுமார் பதினைந்து தமிழ்மொழி மற்றும் சிங்களமொழிப் பாடசாலைகளுக்கு மாடிக் கட்டடங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார். கம்பஹா மாவட்டத்தின் வத்தளை தொகுதியிலுள்ள ஹுனுப்பிட்டிய சாஹிரா மஹாவித்தியாலயத்துக்குஇரண்டு வகுப்பறைக் கட்டடங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.
மதவழிபாட்டுத் தலங்களுக்கு அவசியமான உபகரணங்களையும் நிதி ஒதுக்கீடுகளையும் இவர் பெற்றுக் கொடுத்துள்ளார்.வீடமைப்பு உதவி, சுயதொழில் வாய்ப்பு, முச்சக்கர வண்டி மீட்டர், டயர் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட சேவைகளையும் இவர் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
கடந்த வியாழக்கிழமை மட்டக்குளி ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற ஜனாஸா தொழுகையின் பின்னர் மாதம்பிட்டிய முஸ்லிம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
– எம்.எஸ்.எம்.முன்தஸிர்
(பாணந்துறைமத்திய குறூப் நிருபர்)