Monday, May 20, 2024
Home » கடுவலை பகுதியில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் மூவர் கைது

கடுவலை பகுதியில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் மூவர் கைது

- தனிப்பட்ட தகராறை தொடர்ந்து கடத்திச் சென்று, தாக்கி கொலை

by Rizwan Segu Mohideen
August 3, 2023 12:22 pm 0 comment

– கொலைக்கு பயன்படுத்திய தடி, கம்பி, முச்சக்கர வண்டி மீட்பு

கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 8ஆவது மைல்கல் பிரதேசத்தில் இளைஞன் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (02) குறித்த பகுதியில் காணப்பட்ட சடலம் தொடர்பில் கடுவலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நிந்தஹேன, கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டி, அங்கொடை பிரதேசங்களைச் சேர்ந்த 36, 46, 47 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களுக்கும் மரணமடைந்தவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறை அடுத்து, குறித்த இளைஞனை கடத்திச் சென்று, முல்லேரியா பகுதியில் வைத்து தாக்கி கொலை செய்த பின்னர் சடலத்தை முச்சக்கரவண்டி மூலம் குறித்த பகுதியில் விட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், வெல்லம்பிட்டி மற்றும் அங்கொடை பிரதேசத்தில் வைத்து, இக்கொலையைச் செய்த சந்தேகநபர்கள் மூவரும் நேற்று (02)மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தடி மற்றும் மின்கம்பி (வயர்) ஆகியவற்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதோடு, இதற்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT