இலங்கையர்கள் என்றும் நம்பிக்கைக்குரியவர்கள், நேர்மையானவர்கள் என்று மாலைதீவைச் சேர்ந்த இஸ்மாயில் பராஸ் தெரிவித்தார்.
கல்கிசை, மிஹிந்து மாவத்தை ஓட்டோ சாரதி ஒருவர் நேர்மையாக நடந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்து கருத்துத் தெரிவித்தபோதே இஸ்மாயில் பராஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இச்சம்பவம் பற்றி தெரியவந்ததாவது: மாலைதீவைச் சேர்ந்த இஸ்மாயில் பராஸ் என்பவர் தனது குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கைக்கு வந்து கல்கிசை, மிஹிந்து மாவத்தையில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து குடியிருந்தார். இஸ்மாயில் பராசுடன் மனைவி, மகள், மகன் ஆகியோர் சில வாரங்களாக இங்கு தங்கியிருந்து விடுமுறையைக் கழித்தனர்.
இந்நிலையில் பராஸ் தனது குடும்பத்தினருடன் தமது கைப்பைகள் சகிதம் சம்பவதினம் காலையில் கல்கிசை மிஹிந்து மாவத்தையில் உள்ள ஓட்டோ வண்டி ஒன்றில் பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளார். இவர்கள் ஓட்டோவை விட்டு இறங்கிய பின்னர் ஓட்டோ வண்டி உரிமையாளரான ஜே.ஆர். பிரசாத் ரொட்ரிகோ என்பவர் மற்றுமொரு பயணி ஒருவரை ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது அதில் பயணம் செய்தவர் ஓட்டோ வண்டியில் ஒரு கைப்பை இருப்பதை சாரதியிடம் தெரியப்படுத்தியுள்ளார். அந்தப் பயணியை இறக்கிவிட்ட பின்னர் ஓட்டோவின் சாரதி மாலைதீவு பிரஜையிடம் அந்தப் பையை ஒப்படைத்துள்ளார். இப்பையில் இலங்கைப் பணம், உள்நாட்டு வெளிநாட்டு பணநோட்டுக்கள், ஆவணங்கள், பயண கடவுச்சீட்டுகள் அப்படியே இருந்துள்ளன. அது தன்னுடையதுதான் என அடையாளம் கண்ட மாலைதீவுவாசி அளவில்லா மகிழ்ச்சியடைந்து நன்றி கூறியது மட்டுமல்லாமல் ஓட்டோ சாரதிக்கு பரிசுகளும் வழங்கினார் இலங்கையர்கள் நம்பிக்கை மிகுந்தவர்கள் என்று அவர் பாராட்டியதையும் கேட்க முடிந்தது.
எம்.கே.எம்.அஸ்வர்…
(மொறட்டுவை மத்திய விசேட நிருபர்)