தலவாக்கலை கிறேட்வெஸ்டன் வனப்பகுதியில் நேற்று (1) மாலை உயிரிழந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
கிறேட்வெஸ்டன் வனப்பகுதியில் பெண்ணொருவரின் சடலமொன்று காணப்படுவதாக தலவாக்கலை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய தலவாக்கலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று கிறேட்வெஸ்டன் மலை பகுதிக்கு சென்றனர்.
அங்கு குறித்த சடலம் அடையாளங் காணப்படாத நிலையில் இது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
வருடத்தில் அதிகமான உள்நாட்டு சுற்றுலா பயணிகள் கிறேட்வெஸ்டன் மலை உச்சிக்கு ஏறுவதற்காக வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் குறித்த பெண் கிறேட்வெஸ்டன் மலைத்தொடருக்கு ஏறுவதற்காக வந்தவர்களில் ஒருவராக கூட இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சடலம் கிறேட்வெஸ்டன் மலை உச்சிக்கு ஏறிச் செல்லும் வழியில் வனப்பகுதியின் நடுப்பகுதியில் காணப்பட்டதாகவும், 25 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட பெண்ணொருவரின் சடலமே என தெரிவித்த தலவாக்கலை பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தலவாக்கலை குறூப் நிருபர்
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர் – செ.தி. பெருமாள்