சிரிய தலைநகர் டமஸ்கஸின் தெற்காக உள்ள ஷியா பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகில் ஷியா முஸ்லிம்களின் புனித நாளான ஆஷுரா தினத்திற்கு ஒரு நாள் முன் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதோடு 20க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
சிரியாவின் ஷியா யாத்திரிகர்கள் அதிகம் வரும் செய்யிதா செய்னப் அடக்கஸ்தலத்திற்கு அருகிலேயே கடந்த வியாழனன்று (27) இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. டெக்சி ஒன்றுக்கு அருகில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றே வெடித்ததாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை பயங்கரவாதிகளின் தாக்குதல் என்று அது கூறியது.
முகமது நபியின் பேத்தியும் இமாம் அலியின் மகளுமான செய்யிதா செய்னப்பின் அடக்கஸ்தலத்தில் இருந்து சுமார் 600 மீற்றர் தொலைவில் இருக்கும் பாதுகாப்பு கட்டடம் ஒன்றை ஒட்டியே குண்டு வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் 2011இல் சிவில் யுத்தம் ஆரம்பமானது தொடக்கம் இந்த ஷியா பள்ளிவாசலையொட்டி பல குண்டு தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன.