உலகக் கிண்ண கால்பந்து தகுதிகாண் போட்டியில் இலங்கை அணி யெமனை வரும் ஒக்டோபர் மாதம் எதிர்கொள்ளவுள்ளது.
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிக்கான அணிகளை பிரிக்கும் குலுக்கல் முறை நேற்று மலேசியாவில் இடம்பெற்றபோதே இலங்கை அணியின் போட்டி விபரம் உறுதியானது.
இதன்படி இலங்கை அணி வரும் ஒக்டோபர் 12 மற்றும் 17 ஆம் திகதிகளில் யெமன் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதன் முதல் போட்டி கட்டாரில் நடைபெறவிருப்பதோடு இரண்டாவது போட்டி இலங்கையில் நடைபெறவுள்ளது.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) தடைக்கு முகம்கொடுத்திருக்கும் இலங்கை உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் பங்கேற்க கண்டிப்பான நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கை அணி வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதி தனது முதல் தகுதிகாண் போட்டியில் ஆடுவதற்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்னதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் புதிய நிர்வாகத்தை தேர்வு செய்வதற்கு தேர்தலை நடத்த வேண்டும் என்று பிஃபா நிபந்தனை விதித்துள்ளது.
இல்லாவிட்டால் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஆட அனுமதி மறுக்கப்படும் என்று கண்டிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தேர்தலுக்காக விளையாட்டுத் துறை அமைச்சர் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்துள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மூன்றாம் தரப்பின் தலையீட்டை காரணம் காட்டி கடந்த ஜனவரி 21 ஆம் திகதி இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு பிஃபா தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.