2023 உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (28) நள்ளிரவு 12 மணி வரை மாத்திரமே இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க முடியுமென திணைக்களம் அறிவித்துள்ளது.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மாணவர்கள் அதிபர்களூடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் சுயமாகவும் விண்ணப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை தரவேற்றியமைக்கான அத்தாட்சியை பிரதியெடுத்து அல்லது தரவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்திருக்குமாறு பரீட்சார்த்திகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலதிக விபரங்களை 1911 என்ற துரித அழைப்பு இலக்கத்திற்கு அல்லது 011 278 4208, 011 278 4537 மற்றும் 011 278 6616 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023 உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு கால நீடிப்பு வழங்கப்படமாட்டாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 110 மத்திய நிலையங்களில் 29,750 ஆசிரியர்களை ஈடுபடுத்தி ஓகஸ்ட் 18 முதல் 27 ஆம் திகதி வரை 2022 கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.