வடக்கு அரைக்கோளத்தின் பெரும் பகுதிகளில் காட்டுத் தீ மற்றும் வெப்ப அலைகள் தாக்கி வரும் நிலையில் மூன்று கண்டங்களில் வெப்பநிலை புதிய உச்சத்தை தொடும் என்று அஞ்சப்படுகிறது.
வட அமெரிக்கா தொடக்கம் ஐரோப்பா மற்றும் ஆசியா வரை சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து விலகி இருக்கும்படியும் அதிகம் தண்ணீரை அருந்தும்படியும் சுகாதார தரப்பினர் எச்சரித்து வருகின்றனர்.
பூமியில் மிக வெப்பமான இடங்களில் ஒன்றாக உள்ள கலிபோர்னியாவின் மரண பள்ளத்தாக்கில் கடந்த ஞாயிறு (16) நண்பகலில் வெப்பநிலை 53.3 பாகை செல்சியஸை தொட்டிருந்தது.
கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகருக்கு அருகில் கடும் காற்றினால் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.
உலகில் வேகமாக வெப்பமயமாகி வரும் பிராந்தியமாக உள்ள ஐரோப்பா அதிக வெப்பமான காலநிலையை எதிர்கொண்டுள்ளது. இத்தாலியின் சிசிலி மற்றும் சார்டினியா தீவுகளில் வெப்பநிலை 48 பாகை செல்சியஸை தொடும் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் எதிர்வுகூறியுள்ளது.
ஐரோப்பாவின் அதிக வெப்பநிலை 2021 ஆம் ஆண்டு 48.8 செல்சியஸாக சிசிலி தீவில் பதிவானமை குறிப்பிடத்தக்கது. சைப்ரஸில் எதிர்வரும் வியாழக்கிழமை வரை வெப்பநிலை 40 பாகைக்கு மேல் இருக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. வெப்பம் தாக்கி 90 வயது முதியவர் உயிரிழந்திருப்பதோடு மேலும் மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவின் ஷின்ஜியாங் பிராந்திய கிராமமான சன்பாவோவில் 52.2 பாகை செல்சியஸ் என்ற சாதனை வெப்பம் பதிவாகியுள்ளது. ஜப்பானின் 47 மாகாணங்களில் 32 இல் வெப்பம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதீத வெப்பத்தால் அமெரிக்காவின் மேற்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் 80 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.