– மருமகனுக்கு பதில் இரையான மாமனார்
அம்பலாந்தோட்டை – கொக்கல்ல பகுதியில் மூவரடங்கிய குழுவொன்று வீடொன்றுக்குள் சென்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (19) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 62 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை வீட்டிற்கு வந்த மூவரில் ஒருவர் இறந்தவரின் மருமகனைத் தேடுவதற்காக வீட்டின் அறையொன்றின் ஜன்னல் ஊடாகப் பார்வையிட்டுள்ளதுடன் அவ்வேளையில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த உயிரிழந்தவரின் பேத்தி இந்த நபரைப் பார்த்து அலறிய நிலையில், பாட்டனார் பின்வாசல் வழியாக சென்று பார்த்தபோது, அங்கு காத்திருந்தவர்கள் அவர் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
உயிரிழந்தவர் அம்பலாந்தோட்டை கொக்கல கடவர பகுதியைச் சேர்ந்த கடவர இஷார என்பவரின் மனைவியின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.
மாடு திருட்டு தொடர்பாக கடவர இஷார என்பவருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இருவர் அதே பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும், மூன்றாவது சந்தேக நபர் கொன்னொருவையைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.