நீர்ப்பாசன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஈரானுக்கான விஜயத்தின் போது அந்நாட்டு அமைச்சர் அலி அக்பரை சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பில் நீர்ப்பாசனம், நீர்த்தேக்கங்கள் மற்றும் எரிசக்தி துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நீர்ப்பாசனம், நீர்த்தேக்கங்கள் மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்த ஈரானின் பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணையத்தின் (UCEC) முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தியிருந்தனர்.
இக்கலந்துரையாடலில் 120 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை நிறைவு செய்ததற்காக ஈரானின் ஃபராப் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு அமைச்சர் ரொஷான் ரணசிங்க நன்றி தெரிவித்திருந்தார்.
மேலும் வடமத்திய மாகாண மக்கள் மத்தியில் பரவலாக காணப்படும் சிறுநீரக நோய் தொடர்பான பிரச்சினையை முன்வைத்த அமைச்சர் ரொஷான் ரணசிங்க, பொலன்னறுவையில் சிறிய அளவிலான சுத்தமான குடிநீர் திட்டங்களை நிர்மாணிப்பதற்கு ஆதரவளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நாட்டின் வர்த்தகம், சுற்றுலா, நீர்ப்பாசனம், நீர்த்தேக்கங்கள் மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் தற்போதுள்ள உறவுகளை மேம்படுத்துவதற்காக நாட்டின் முன்னணி வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் வெற்றிகரமாக அமைந்ததாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.